Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Friday March 20, 2009

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் - (2)

வெங்கட் சாமிநாதன்


இது கடந்த சுமார் இருபது வருட அறுவடை. அப்படித்தான் ஒரு வட்டத்தை நான் கோடிட்டுக் கொண்டேன். வேறு எந்த இரண்டு பத்துக்களில் இத்தகைய வளம் வந்து சேர்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. இதில் தான் என்னும் தன் பிம்பத்தைப் பற்றிய பிரமை மேலிட்டு ஊர்வலம் வருபவர்களை யெல்லாம், 'மகா ராஜாதி ராஜன்......... வந்தேனே, வந்தேனே,' என்று மேடையைச் சுற்றி வருபவர்களை யெல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது கூத்தடிப்பு. தெருக்கூத்தடிப்பு. 'என்னைப்பார், நான் என்னென்ன பெயர்கள் எல்லாம் உதிர்க்கிறேன் பார். அத்தனையும் லத்தீன் அமெரிக்க ஒரிஜினலாக்கும். என்னைப் பார் என் அறிவைப் பார் என்னென்ன இஸமெல்லாம் எனக்குத் தெரியுது பார்" என்னும் கூத்தடிப்பு. அவர்கள் ராஜபார்ட்டுகளாக வலம் வந்தாலும் அவர்கள் தரித்திருக்கும் உடைகள் வாடகைக் கடைகளைச் சேர்ந்தவை. ஏனெனில், இணையத்தில் பெறும் தகவல்களை யெல்லாம் தொகுத்து அவற்றைத் தன்னதாக, தான் அறிந்ததாக, தன் அனுபவமாக சந்தையில் வைப்பவர்கள் இவர்கள். இன்றைய தார்மீக சரிவின் விளைச்சல்கள். இருப்பினும் வெட்க உணர்வற்ற படாடோபங்கள் இவர்கள். இவர்கள் பெயரையும் நான் சொல்லவில்லை. எவரைச் சொல்வது? யாரை விடுவது?

இக்கால கட்டத்திலே தான் மறுவிஜயம் செய்துள்ள அ.முத்துலிங்கம் என்னும் உலகத் தமிழ் பிரஜையையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். உலகம் முழுதிலும் தான் சென்றவிடமெல்லாம் நுண்ணிய மனித உறவுகளை, தன் மெல்லிய புன்னகையோடு அலட்டாமல், சத்தம் எழுப்பாமல், சவுக்க காலத்தில் மந்திர ஸ்தாயியில் வீணையின் நாதம் காற்றில் அலையாடி வருவது போல சொல்லிச் செல்லும் அவர் எழுத்தின் மாயம் எந்த வகைப்படுத்தலிலும் அடங்காது தனித்து நிற்பது. அவரது உலகமும் மொழியும் போல.

அன்று யாப்பு கவிதை அல்லாததையும் கவிதை என அடையாளம் காட்ட பயன் பட்டது. கவிதை இத்தகைய சட்டகங்களால் இனம் காணப்படுவதில்லை. இன்று இனம் காட்டப் பயன் படும் சட்டகம் வேறு. மறுபடியும் சட்டகம் தான். ஆனால் கவிதை அகமும் புறமும் மிக விஸ்தாரமான, ஆழ்மான தளத்தை ஆக்கிரமித்துள்ளது, கவிதையின் வளத்தைப் பெருக்கியுள்ளது. இன்றும் கவிதையை இனம் காணுவது அதன் இன்றைய சட்டகத்தையும் மீறித்தான். அவ்வாறு கவிதைகளையும் கவிஞர்களையும் இனம் கண்டு அன்று சங்கக் கவிதைகளைத் தொகுத்தது போல் இன்று வந்துள்ள தொகுப்பு ராஜமார்த்தாண்டனின் கொங்கு தேர் வாழ்க்கை என்ற ஒரு சிறப்பான தொகுப்பு. இதில் காணும் கவித்வ பெருக்கும் தள விஸ்தாரமும் அனுபவ பரப்பும் அதற்கு முந்தைய ஒரு நூற்றாண்டு தமிழ் கவிதை காணாதது. அதனால் தான் புதுக்கவிதையின் முந்தைய தமிழ்க் கவிதை வளத்தை கொங்கு தேர் வாழ்க்கையின் முதல் தொகுப்பில் தொகுத்த சிவகுமார், சங்க காலத்திலிருந்து இரண்டாயிர வருட காலத்திற்கு தன் வீச்சைப் பரப்பிக்கொள்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்ணிய குரல்கள் தமிழ் கவிதையில் வந்து சேர்ந்துள்ளது ஒரு புதிய நிகழ்வு. அவர்களிடம் காணும் சீற்றம் வெளிப்பாடு பெறுவது இயல்பானது. இன்றைய கவிதையும் அவர்கள் தம் ஆளுமையை சீற்றத்தின் உச்ச குரலில் வலியுறுத்துவதும் புரிந்து கொள்ளவேண்டியவையே. இப்பெண்ணிய வெளிப்பாட்டின் சீற்றைத்தைக் கண்டு சீறிய ஆண் கவிஞர்களின் குரல் நேர்மையற்ற ஆணாதிக்கக் குரல்கள் தான். ஆனால் இப்பெண்ணிய சீற்றம் ஏன் அதன் இயல்பான பழகு தமிழ் சொற்களை ஒதுக்கி, வலிந்து வழக்கில் இல்லாத வடமொழிச் சொற்களை திட்டமிட்டுத் தேடிக் கொணர்கிறது? பயமா? அல்லது தமக்கே அவை ஆபாசமாகத் தோன்றுகிறதோ என்னவோ. வடமொழியில் சொன்னால், அவை ஆபாசமாகத் தோன்றவில்லையோ என்னவோ. ஆக, அது உண்மையில் சீற்றம் இல்லை, பாவனையே என்றாகிறது. வார்த்தைகளைக் கொட்டுவதில் இல்லை இல்லை, வார்த்தைகளை உணர்வுகளை அடக்கி ஆள்வதில், குறிப்புணர்த்துவதில் தான் கவித்வம் இருக்கிறது என்பதை பெண்ணிய கவிஞர்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் கவித்வம் மிக்கவர்கள். அவர்கள் உணர்வுகள் உண்மையானவை. சல்மா, உமா மகேஸ்வரி, மாலதி மைத்ரி போன்றவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதே சமயம் இப்பெண்ணிய கவிஞர்களின், பாணியில், மொழியில் அல்லாது, தம் பெண்மையை தன் மொழியில் பாணியில் வெளிப்படுத்தும் வேறுபட்ட ஒரு கவித்வம் திலக பாமாவினது. இவரின் பெண்ணிய சீற்றமும் தன் சுயத்துவத்தின் வலியுறுத்தலும் மற்றவர்களுக்கு கொஞ்சமும் குறைந்தல்ல. இருப்பினும் மற்றவர்கள் இவரைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்களது பாவனைகளை இவர் ஏற்றுக்கொண்டதில்லை. ஆக, பெண்ணீய வெளிப்பாட்டைவிட, பாவனைகளே முக்கியமாகப் படுகிறது பெண்ணிய கவிஞர்களுக்கு என்று தோன்றுகிறது.

.

இன்றைய தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய பாரிய பங்களிப்பு என்று நாவல் வளத்தைச் சொல்லவேண்டும். இதில் தான் எத்தனை வேறுபட்ட தனித்வமான திறன்கள், ஆளுமைகள்! இதில் ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமையை, புதுமைப் பித்தன் ஒருவரிடம் தான் தமிழ் கண்டிருக்கிறது. அதிலும் புதுமைப் பித்தன் அற்ப ஆயுளில் இறந்து விட்டதால், அந்த ஆளுமை தன் முழு விகாசத்தைக் காணமுடியாதே போய்விட்டது. அது செயல் பட்ட சொற்ப காலத்தில் அதன் வீச்சின் பரிமாணத்தை கோடி காட்டிச் சென்று விட்டது. பலத்தை சர்ச்சைகளை எதிர்கொண்ட அவரது விஷ்ணுபுரம், ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த வரலாறு, மதப் போராட்டங்கள், தத்துவ விசாரணைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய அதன் வீச்சும் ஆழமும், அது கையாண்ட மொழியும் திகைக்க வைக்கும். இத்தகைய வீச்சில் யாரும் வரலாற்றையும் கற்பனையையும் பரப்பியது கிடையாது. அதே வீச்சும் விமர்சனமும் தமிழகத்தில் மார்க்ஸீயம் என்று சொல்லப்படும் ஒன்றின் பின்னணியில் பின் தொடரும் நிழல் என்ற நாவலும் காயம் பட்டோரின் சீற்றத்திற்கு ஆளானது. பின்னும் அவரது தளமும் கையாளும் வாழ்க்கைக் கூறுகளும் ஏழாம் உலகம் நாவலில் மாறுகிறது. பிச்சைக்காரர்களின் உலகில் நாம் இதுகாறும் அறியாத கொடூரங்களும், சமயத்திற்கும் மனிதருக்கும் ஏற்ப மாறும் தர்மங்களும், பெண்கள் அந்த உலகில் கூட படும் வதையும், இந்த உலகை அவர் அறிந்தது எப்படி என்று திகைக்க வைக்கிறது. 40 வருடங்களுக்கு முன் நடந்த அகில இந்திய காவல் அதிகாரிகளின் மகாநாட்டில் பிச்சை எடுத்து தன் வயிறு நிரப்ப குழந்தைகளைத் திருடி, முடமாக்கும், குருடாக்கும் கொடுமைகளைத் தகவல்களாக பீஹார் காவல் அதிகாரி விவரிக்க நான் கேட்டிருக்கிறேன். அந்த உலக மனிதர்களும் அவர்கள் தர்மங்களும் இந்த நாவலில் அனுபவ உக்கிரங்களாக நம் முன் விரிகின்றன. இத்தகைய கொடுமைகளின், குரூரங்களின் வாழ்விடம் பீஹார் தான் என்று அன்று நான் நினைத்திருந்தேன். இல்லை, தமிழ் நாடு அப்படி ஒன்றும் 'அமைதிப் பூங்கா' இல்லை. குற்றங்களும், குரூரங்களும், வேறு பெயர்களில் இங்கு வாழ்கின்றன,

இது போல பலர் நாம் அறியாத உலகங்களை, தமிழ் இலக்கியம் பதித்திராத உலகங்களை பிரும்மாண்டமாக நம் முன் வைக்கிறார்கள். முன்னேற்றம் என்றும் செல்வக் கொழிப்பு என்று சொல்லப்படும் வெளிப்பகட்டின் பின் இருக்கும் மனித அவலங்கள். எம். கோபால கிருஷ்ணன் என்ற புதியவரிடமிருந்து வந்த மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது. எங்கிருந்தோ ஒரு இடத்திலிருந்து தொடங்கும் தேடல், ஒவ்வொருவரும் அவரவர் வழியில் ஒரே இடத்தில் தான் முடிகிறது. பின்னும் அதே போல தொடரும் தேடல் தான். தேடல் தானா அது? மீனவர் வாழ்க்கை அந்தந்த நிமிடம் செத்துப் பிழைக்கும் கடல் நடுவில். அந்த உலகின் உள்ளே கூட இத்தகைய பிருமாண்டம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது ஆழி சூழ் உலகு. யார் கேட்டிருக்கிறார்கள் ஜோ டி க்ரூஸை?. இத்தனை திறன் இத்தனை நாள் எங்கு ஒளிந்திருந்தது? சம நீதி என்றும் ஜாதி ஒழிப்பு என்றும் அரசியல் பேசி வந்தாயிற்று முக்கால் நூற்றாண்டு காலமாக. அந்தந்த ஜாதியின் வெறி இந்த கோஷங்களுக்குள் மறைக்கப்பட்டு வந்துள்ளது எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் யாரிடமிருந்து சுயவிமரிசனம் வருவதில்லை. தமிழ் இலக்கியத்தில் தான், அரசியல் வாதிகளையும் சித்தாந்திகளையும் மீறி ஒரு சில இடங்களிலிருந்து சுய விமரிசனமாக அவரவர் உலகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பெருமாள் முருகனின் எழுத்து அத்தனையும் இத்தகைய விமரிசனமாகத்தான் நான் பார்க்கிறேன். கௌண்டர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே யான சமூக உறவுகளில் காணும் ஆதிக்க மேலாண்மையின் அடக்கு முறைகள். பெருமாள் முருகனுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை இந்த உலகை எழுத்தில் பதிவதில். முற்றிலும் ஒரு புதிய குரலாக, பி.ஏ.கிருஷ்ணனின் நாவல், புலி நகக் கொன்றை, கவனத்தை வேண்டுவது. ஒரு ஆசாரமான, வித்வத் நிறைந்த வைஷ்ணவ குடும்பத்தின் இரண்டு தலைமுறைக்கு நீளும் கதை அக்கால கட்டத்தில் அதைச் சுற்றி நிகழும் சமூக மாற்றங்களின், அரசியல் வரலாற்றின் நிழல் படிய சொல்லப்பட்டுள்ளது. இக்குரலைப் பதிய இன்றைய சூழலில் ஒரு தைரியம் வேண்டும். இன்னொரு குரல் மிக முக்கியமாகப் பேசப்படவேண்டும். கண்மணி குணசேகரன். அவரது அஞ்சலை நமக்கு அறிமுகப்படுத்தும் பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆண்களை நம்பியிருப்பவர்கள் இல்லை. இருப்பினும் அவர்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் வதை படுபவர்கள். அவர்களுக்கு, ஏழை விவசாய கூலித் தொழில் செய்பவர்கள், ஏதும் பெரிய ஆசைகள், கனவுகள் கிடையாது. ஆனால் மனிதர்க்ளுக்குள்ள அடிப்படையான பசி, பாலியல் உறவுகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் ஒரு அதீத அளவில் கொண்டவர்கள். அத்தோடு தன் முனைப்பும். ஆனாலும் அவர்கள் ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. திரும்பத் திரும்ப அதே சக்கரம், அதே சுழற்சி. தான் கண்ட பழகிய மனிதர்களை உலகை எவ்வித சித்தாந்தப் பூச்சும் இன்றி நம் முன் வைத்துள்ளார் கண்மணி குணசேகரன். ஒரு வித்தியாசமான படைப்பாளி. இன்னமும் ஒரு கிராமத்து விவசாயியின் பிரக்ஞையிலேயே வாழ்பவர். தன்னைச் சுற்று ஒரு ஒளி வட்டம் சுழல்வதாக எண்ணாத ஒரு தமிழ் படைப்பாளி. அதே போலத்தான் யூமா வாசுகியும். அவரும் நாவல்,சிறுகதை, கவிதை, சித்திரம் என பலதுறைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்பவர். அலட்டிக்கொள்ளாத ஒரு தமிழ் எழுத்தாளர். ரத்த உறவு என்னும் நாவலில் அந்த போர்வையில் தன் பால்ய கால வாழ்வைத்தான் எழுதியுள்ளார் என்று சொல்லவேண்டும். தந்தையும், பாட்டியும், இன்னும் மற்ற உறவுகளும் எவ்வளவு கொடூரமாக குழந்தைகளைக் கொடுமைப்படுத்தமுடியும், என்பது மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு இரக்கமோ, அன்போ பாசமோ இல்லாது தன் தேவைகளே பெரிதாக எண்ணி, மற்றவர்களை வதைக்கமுடியும் என்பது யூமா வாசுகியின் நாவலை/சுயசரிதத்தைப் படிக்கும்போது இது சாத்தியமா என நினைக்கத் தோன்றும். சிறுவனும் அவன் அக்காவும் தான், இருவருமே சிறு வயதுக் குழந்தைகள் தான், ஒருவருக்கொருவர் பாதுகாப்பென வாழ்வைத் தொடர்பவர்கள். இரு படைப்பாளிகளுமே தம் இயல்பில் தமக்குத் தெரிந்த உலகை எவ்வித அலட்டலும் இல்லாமல் தந்துள்ளனர். அவர்கள் அறிந்த அந்த வாழ்க்கையின் இயல்பான வெளிப்பாடு தான் தமிழுக்கு நாம் அறியாத புது உலகங்களை தந்துள்ளது. தமிழுக்கு வளம் சேர்க்க, லத்தீன் அமெரிக்க, போஸ்ட் மாடர்னிஸ்ட், அதி யதார்த்த, மந்திர வாத அல்ட்டல்கள், முகமூடிகள், தோரணைகள், தேவையில்லை. ஒவ்வொரு தமிழ் வாழ்வும் அதன் இயல்பான வெளிப்பாட்டிலேயே இது காறும் காணாத தனித் தன்மையைத் தந்துவிடும் என்பதற்கு இம்மாதிரியான அலட்டல் இல்லாத படைப்புகள் நிரூபணங்களாகின்றன.





Copyright:thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.