Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Saturday September 19, 2009

இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்


அனைத்துத் துறைகளுக்கும் மனித சக்தி இன்றியமையாததாகும். துறைகளை உருவாக்குவதும், வளர்ப்பதும், பயன்கொள்வதும் ஆகிய அனைத்தும் மனிதனே என்பதால் அவன் அவனின் சக்தியை எண்ணியே தன்குல முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்துவைக்கிறான். மனிதனின் சக்தியை உடல் சக்தி, அறிவு சக்தி எனப் பிரித்துக் கொள்ளலாம். மனித உடலின் சக்திச் செலவை அறிவு சக்தி மிச்சப்படுத்துகிறது. இதன்முலம் உடலின் அதிக உழைப்பு சேமிக்கப்படுகிறது. இந்த உழைப்புச் சேமிப்பிற்குத்தான் கருவிகள் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படுகின்றன.

குறிப்பாக இந்தியாவின் மனித சக்தி மகத்தான மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த மனித சக்தியைக் கொண்டு உலகமே முன்னேற்றம் கண்டு வருகிறது என்பது பற்பல புள்ளி விபரங்களால் தெரியவருகின்றன. இந்தியாவின் இளைய மனித சக்தி, கணினித் துறையில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் / சவால்கள், நன்மைகள / சிக்கல்கள், முன்னெடுப்புகள்/ தடைகள் முதலானவற்றை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

சன் மைக்ரோ சிஸ்டத்தினைத் தொடங்கியவர்களுள் ஒருவர் வினோத் கோசலா என்ற இந்தியர் ஆவார். தற்போதைய அளவில் தொண்ணூறு விழுக்காடு கணினிகளில் பயன்படுத்தப்படும் பென்டியம் சிப் என்பதைக் கண்டறிந்தவர் வினோத் தாம் என்ற இந்தியர். சபீர் பாட்டியா என்ற இந்தியர்தான் ஹாட்மெயில் என்ற மின்னஞ்சல் சேவையை உருவாக்கியவர். அருண் நேட்ராவலி என்ற இந்தியர் தான் சி, சிஹ போன்ற மொழிகள் உருவாகக் காரணமான ஏடி:டிபெல் என்ற குழுமதின் தலைவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 2000 என்பதன் இயக்கச் சோதனைப் பிரிவின் தலைவராக விளங்கிய இந்தியர் சஞ்சய் தெஜ்விரிகா என்பவராவார். இவர்கள் அனைவரும் கணினித் துறையில் கால் பதித்து வெற்றி கண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள். இவர்களின் உதவியால் இந்தியா அறிவு சார் அறிஞர்களின் நாடாகத் தற்போது கணினி வல்லுநர்களால் ஏற்கப்பட்டு வருகின்றது.

அறிவு சார்ந்த இந்திய வல்லுநர்கள் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கக் காரணம் என்ன என்பதையும் இங்குச் சிந்தித்தாக வேண்டும். ஐ.ஐ.டி என்ற உயர் தொழில்நுட்பக் கூடங்களில் படிக்கும் நான்கில் முன்று பங்கு மாணவர்கள் உடன் அமெரிக்காவிற்குச் சென்றுவிடுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்வாறு செல்லும் அறிவு சார் மாணவர்களால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சிந்தித்தாக வேண்டும்.

இந்தியாவில் அறிவு சார் வல்லுநர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லையா? வாழத் தேவையான பணம் கிடைக்கவில்லையா? வசதி வாய்ப்புகள் இல்லையா? முதலான பல கேள்விகள் மேற்சொன்ன விளைவுகளில் இருந்து பிறக்கின்றன. இந்தியாவில் உள்ள போட்டி மனப்பான்மை, உழைப்பினைச் சுரண்டும் அதிகார வர்க்கங்கள், மலிந்து கிடக்கும் குறுக்குவழிகள், அரசியல் சமுகவியல் குறுக்கீடுகள் முதலான பல காரணங்கள் அமெரிக்காவை நோக்கி அறிவுசார் இளைஞர்களை அழைத்துச் சென்றுவிடுகின்றன. இத்தடைகளைத் தகர்த்து அறிவுசார்ந்த இந்திய ஆற்றல் வளங்களை இங்கேயே தக்க வைத்துக் கொண்டால் இந்தியாவின் அறிவு உலக அரங்கில் இன்னும் மதிக்கப்படும்.

இந்தியாவில் கணினியுகம்

தற்போது கணினித் துறை இந்திய அளவில் பெருத்த முன்னேற்றங்களை அடைந்துள்ளது. வீட்டுக்கு ஒரு கணினி, அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படல், இணைய வழிப்படல், வீதிக்கு இரண்டு கணினிப் பயிலகங்கள், தொழில்கள் அனைத்திலும் கணினி நுழைவால் விரைவும், எளிமையும், அழகும் நேர்த்தியும் புகுந்து கொண்ட நிலை போன்றனவற்றைக் கொண்டு அளவீடும் பொழுது கணினி இந்தியாவின் கணினி யுகம் தொடங்கிவிட்டதை உணரமுடிகின்றது.

விளம்பரம், விமானப்போக்குவரத்து, கட்டடக்கலை, வங்கித்துறை, உயிர் தொழில் நுட்பம், தகவல் பரிமாற்றம், கல்வி, பொருளாதாரம், உடல்நலம், ஆயுள் காப்பீடு, உற்பத்தி, இதழியல், தொலைத்தொடர்புத்துறை, சுற்றுலா போன்ற பல துறைகளில் கணினி நுழைந்து மனித சக்திக்குப் பெருமளவில் உதவி வருகின்றன.

இந்தக் கணினியுகத்திற்கு ஏற்ற நிலையில் மக்களை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் கணினி சார்ந்த வல்லுநர்களுக்கு உருவாகியுள்ளது. தொட்டால் செய்திகள் தரும் கணினிகளை, தொட்டால் பணம் தரும் கணினிகளை உருவாக்கவேண்டிய உற்பத்தியையும், மக்கள் பயன்படுத்தக் கூடிய விழிப்புணர்வையும் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக இளைய உலகைத் தயார் படுத்தியாக வேண்டியிருக்கிறது.

இளைய உலகினரை கணினியோடு மிகு தொடர்புடையவர்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கல்வி நிலையங்கள் கணினியைக் கட்டாயப் பாடத்திட்டத்தில் கொண்டு வருகின்றன. அரசு சார் கல்வி நிலையங்களும் அரசு சாரா கல்வி நிலையங்களும் இத்தகைய பணியை தம்மால் முடிந்த அளவில் செய்து வருகின்றன.

அரசும் கணினி விழிப்புணர்வும்

அரசு கல்வி நிலையங்களில் தற்போது குறைந்த விலையில் மடிகணினிகளை மாணவர்கள் வாங்கிக் கொள்ள ஏற்ற வகை செய்யப் பெற்றுள்ளது. பள்ளிகளில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு மடி கணினிகள் வழங்கப் பெறும் முன்முயற்சியும் பாராட்டத்தக்கது. இவ்வகையில் மெல்ல கணினியுகத்திற்கு இளைஞர்களைத் தயார் படுத்தும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

தமிழக அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கணினிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் நல்ல வாய்ப்புக்களைப் பெற்றவர்களாகின்றனர். ஆனால் பிற படிப்பு படிக்கும் மாணவர்கள் கணினித் துறை அறிவு பெற்றிட அவர்களுக்கு தனித்த சான்றிதழ்ப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இச்சான்றிதழ்ப் பயிற்சி கணினிப் பட்டப் படிப்பு படிக்காத மற்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு உரியதாக கற்பிக்கப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் நிறைந்த கணினிக் கல்வியை இதன்வழி மாணவர்கள் பெறுகின்றனர். கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த முதலாம் ஆண்டிலேயே இக்கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது இரண்டாம் ஆண்டில் இப்பயிற்சியின் தேர்வு நடத்தப்பட்டுத் தக்கமுறையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி வழியாக மாணவர்கள் கணினிக்குள் தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றை முறைப்படுத்தித் தக்க நிலையில் வெளியீடுகளைப் பெறும் அடிப்படைக் கணினி மென்பொருட்களும், செயல்பாடுகளும் கற்பிகக்கப் படுகின்றன.

எதிர்கொள்ளும் சாவல்கள்

இப்படிப்பின் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் கணினியுடன் நேரடித் தொடர்பு கொள்ளுகிறார். இயக்க, அணைக்க, உள்ளீடு செய்ய, வெளியீட்டைப் பெற அம்மாணவர் எவர் துணையும் இன்றி செயல்பட முடியும். என்றாலும் முன்றாண்டு படிப்பில் இச்சிறு சான்றிதழ் பயிற்சி எந்த அளவிற்கு வெற்றியைத் தரும் என்பது எதிர்கொள்ளும் சவால்களுள் ஒன்றுதான்.

இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக படித்த மாணவர் தொடர்ந்து இந்தப் பயிற்சியை நினைவில் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்தாக வேண்டும். தன் வீட்டிலோ, அல்லது தனியார் நிறுவனத்திலோ, அல்லது கல்லூரியிலோ அவர் வாரம் ஒரு முறையாவது தன் பயிற்சியை நினைவு கூர வேண்டும். இல்லையெனில் கற்றது மறந்து போக வாய்ப்புண்டு.

இப்பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற மாணவர்க்கு கணினி சார்ந்த வேலைகள், தொழில்கள் கிடைக்க வேண்டும். அதற்கு ஏற்ற நிலையில் இப்பயிற்சி வெற்றி கரமாக உள்ளது என்று மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

இதற்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் தரம் மிக்கவர்களாக இருக்கவேண்டும். வரும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கவேண்டும். வராமல் பின்தங்கும் மாணவர்களை மீண்டும் வரச் செய்ய வேண்டும். இத்தனைச் சவால்களுக்கு இடையில் இப்பயிற்சி கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் நடைபெற்றுவருகின்றது.

இதன்முலம் ஏற்பட்ட நன்மைகள் என்று காணுகையில் பல துறை சார்ந்த மாணவர்கள் தம் துறைக்கு எவ்வாறு கணினி பயன்படும் என்பதை அறிந்து கொள்ளுகிறார்கள். ஓரளவிற்குக் கணினி குறித்த அச்சத்தை , வெட்கத்தைப் போக்கிக் கொள்ளுகிறார்கள். கணினியை வெறும் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் அறிவு சார் மதிப்புக் கருவியாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

இந்தக் கல்வித்திட்டத்திற்கான உடன்பாடு அரசு கல்லூரிகளுக்கு மட்டும் நிகழ்ந்துள்ளது. இந்தக் கல்வித்திட்டம் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரிதல் வேண்டும். இதன்முலம் ஒரு வலிமை மிக்க கணினிப் பயன்பாட்டு நாடாக இந்தியாவை முன்னேற்ற முடியும். இதனைத் தற்போது செய்யத் தவறினால் இந்தியாவின் வளர்ச்சியில் தக்க முன்னேற்றங்கள் ஏற்பட முடியாது.

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்,

சந்திரசேகரன் கணினித் துறைத்தலைவர்,

மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

--

M.Palaniappan

manidal.blogspot.com

puduvayalpalaniappan.blogspot.com




Copyright:thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.