Thursday April 5, 2007
இரு மாறுபட்ட கவிதைகள்
நீ “தீ”
சென்ற மாதம் சிங்கப்பூரில் அமோக்கியோ நூலக பிரிவிற்கு சென்றிருந்தேன். கவிதை புத்தக வரிசையை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை ஒரு புத்தகம் கவர்ந்தது. காரணம் எழுத்தாளரின் பெயர்தான். எழுத்தாளரின் பெயர் லாவண்யா. புத்தகத்தின் பெயர் இன்னும் வரவில்லை உன் நத்தை இரயில். ஆசிரியர் உரையை படிக்காமல் நேரடியாக கவிதைக்குள் மூழ்கிவிட்டேன் என்னை மிகவும் கவர்ந்தது ஒரு கவிதை வழிபாடு எனும் தலைப்பில் வந்த கவிதை
வழிபாடு
அப்போது நினைவுக்கு வராது
நீ கண்ட அழகுகள்
நீ கண்ட சுகங்கள்
நீ தொட்ட சிகரங்கள் யாவையும்
உன் பிறவியாய் உனக்களித்த யோனி
பெண்ணின் யோனி
அது வெறும் குறியல்ல
அது வெறும் குழியல்ல
இருப்பின் விருத்தி மூலம்
வழிபடதக்கது
நிகழில் நீ இருப்பதற்காய் இரும்பூதெய்தி
களிக்கும் ஒரு தருணம் சாத்தியமாகையில்
யோனியை வழிபடு
நன்றியோடு
இந்த கவிதையை படிகத்ததும் கவிஞர் பற்றி அறிய ஆசிரியரின் உரைபகுதிக்கு சென்றேன் லாவண்யா என்பது புனைப்பெயர் உண்மையான பெயர் சத்தியநாதன் என்றிருந்தது. ஏனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தயது. நான் படித்தவரையில் பெண்மையை இந்;தஅளவு உயர்த்தி எந்த ஒரு ஆண்கவிஞரும் எழுதியதில்லை. அப்படி நான் படித்தில் இருந்தவையெல்லாம் வெரும் அலங்காரவரிகளே.
உறுப்பு சுதந்திரம் என்று எழுதும் பெண்ணியவாத கவிஞர்களால் கவனிக்கபட வேண்டிய கவிதை இது.
இந்த கவிதையை படித்தபோது இதற்கு முன் நான் படித்த ஒரு கவிதை என்முன் நிழலாடியது. நான் மிகவும் இரசித்த கவிதை அது கவிஞர் அறிவுமதி நடத்தும் தை என்ற காலாண்டிதழில் வெளிவந்தது. கவிதையின் தலைப்பு ஆதங்கம் எழுதியவர் சிங்கப்பூர் பெண்கவிஞர் மலர்விழி இளங்கோவன்.
ஆதங்கம்
திருமணமான
இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முறை
கூறியிருப்பாய்….
என்னையே
உனக்கு கொடுத்தேனே
என்று…..
எண்ணிப் பார்ப்பாயா
என்றேனும்….
நீ உன்னை
என்னிடம் இழந்த
அதே நொடியில்தான்
நானும் என்னை
உன்னிடம் இழந்திருக்கிறேன்
என்பதனை….
எத்தனை ஆண்கள் இப்படி நினைத்திருப்பர் (நானும் நினைச்சதிலங்க) .இது போன்ற கவிதைவரியையும் நான் படித்த வரையில் எத்த ஒரு ஆண்கவிஞரும் எழுதியதில்லை. சிங்கப்பூர் கவிமாலை போன்ற நிகழ்வுகளில் கவிஞர் மலர்விழி இளங்கோவனை சந்திக்கும் வாய்ப்பு அமைவதுண்டு. அப்படியொரு நிகழ்வில் நான் இந்த கவிதையை படிக்கநேர்ந்தது பற்றி கூறி மிகவும் அருமையென்றேன். கவிஞர் மலர்விழி இளங்கோவனின் குரல் ஆதங்கமாகவே ஒலித்தது. தலைப்பு ஆண்களின் ஆதங்கம் என்று குடுத்திருந்தேன் ஆனால் இதழில் ஆண்களை ஆண்கள் நிராகரித்து விட்டனர் என்றார். இவரது மற்ற கவிதைகளையும் நான் இரசிப்பேன் காரணம் இவரது பல கவிதைகள் ஆதங்கதொணியில் ஒலிக்கும். சமூகத்தின்மேல் கொண்ட அக்கறையுடன் என்பதாலே.
எல்லா ஆண்கவிஞர்களாலும் கவனிக்கபடவேண்டிய கவிதை இது.
எழுத்து: நீ “தீ”
hsnlife@yahoo.com
Copyright:thinnai.com