Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Thursday November 18, 2004

கடிதம் நவம்பர் 18,2004 - நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி

சலாஹுத்தீன்


====

‘ஹாத்தமன் நபி’ என்ற அரபிப்பதத்திற்கு பொருள் ‘இறுதி நபி’ என்பது

சரியா ? என்ற கேள்விக்கு விடை காண நேசகுமார் மேற்கொண்ட முயற்சிகள்,

குர்ஆனின் வசனத்திற்கு விளக்கம் அறிய முயலும் ஒரு முஸ்லிமல்லாதவரின்

முயற்சிகள் என்ற கண்ணோட்டத்தில் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் அவர்

இந்த வார்தையின் ஒரு பொருளான ‘முத்திரை நபி’ என்பதோடு நிறுத்தி

விட்டார். இதே கேள்வியை ஒரு மார்க்க அறிஞரின் உதவியோடு நான்

தொடர்ந்தபோது கிடைத்த விளக்கங்களை இங்கு கொடுத்துள்ளேன். குர்ஆனின்

வசனங்களுக்கு விளக்கம் பெற மார்க்க அறிஞர்களின் உதவி ஏன்

தேவைப்படுகிறது என்பதையும் கடைசியில் விளக்கியுள்ளேன். நேசகுமாருக்கு

இந்த விளக்கங்கள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

1. ‘ஹாத்தம்’ என்பதன் அகராதி மொழி பெயர்ப்பு என்ன ?

‘முன்ஜிது’ என்ற பெயரில் ஒரு யூதரால் தொகுக்கப்பட்ட, பிரபலமான,

அரபுலகில் பரவலாக உபயோகிக்கப்படும் அரபி மொழியகராதியில்

‘ஹாத்தம்’ என்ற சொல்லுக்கு நேரடிப்பொருள் ‘மோதிரம்’ என்பதாக

குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் மோதிரங்கள் முத்திரைகளாக

உபயோகப்படுத்தப்பட்டதால், (‘இலச்சினை மோதிரங்கள்’ என்பதுபோல)

‘ஹாத்தம்’ என்ற வார்த்தைக்கு ‘முத்திரை’ எனவும் பொருள் கொள்ளலாம்.

ஆனால், ஒரு வார்த்தையின் நேரடி பொருளை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளலாம்

என்றால், ‘மோதிரம்’ என்ற பொருளைத்தான் பயன்படுத்த முடியும். அரபு

நாடுகளில் இன்றளவும் மோதிரங்கள் ‘ஹாத்தம்’ என்றே அறியப்படுகின்றன

என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

‘ஹாத்தம்’ ‘ஹத்தம்’ போன்ற அரபி வார்த்தைகளுக்கு ‘மோதிரம்’

‘முத்திரை’ ஆகிய பொருள்களை தவிர, ‘இறுதி’ ‘மூடுதல்’ போன்ற

பொருள்களும் அதே அகராதியில் காணக்கிடைக்கிறது. ‘தொடங்குதல்’

என்பதற்கு எதிர்ப்பதமாகவும் (antonym) இந்த வார்த்தை

குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஹத்தமல் கிதாப’ என்ற வார்த்தையின் பொருள்

‘புத்தகத்தை படித்து முடித்து விட்டான்’ என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் முஸ்லிம்களிடையேயும் ‘ஹத்தம்’ என்ற வார்த்தை ‘குர்ஆனை ஓதி

முடித்தபின் ஓதும் துஆ’ ‘இறந்தவர்களுக்காக செய்யப்படும் இறுதி பிரார்த்தனை’

ஆகிய பொருள்களில் உபயோகிக்கப்படுகிறது.

ஆக, ‘ஹாத்தம்’ அல்லது ‘ஹத்தம்’ என்ற வார்த்தைக்கு இடத்திற்கேற்ப ‘இறுதி’

என்று பொருள் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

2. ‘ஹாத்தம்’ என்ற வார்த்தை குர்ஆனில் வேறு இடங்களில் பயன் படுத்தப்

பட்டிருக்கிறதா ?

‘ஹாத்தம்’ மற்றும் ‘ஹத்தம்’ என்ற வார்த்தைகள், குர்ஆனில் பல இடங்களில்

(உதாரணமாக 2:7, 4:155, 6:46, 7:100-101, 9:87, 9:93 இன்னும்

பல) உபயோகிக்கப்பட்டுள்ளது. இறைவனின் கட்டளைகளை மனமுரண்டாக

நிராகரித்தவர்கள், மாறு செய்தவர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோரை பற்றி

குறிப்பிடும்போது, அவர்களின் இருதயங்களில் முத்திரையிட்டு விட்டதாக

இறைவன் கூறுகிறான்.

நேசகுமார் சொன்ன, ‘முத்திரை நபி’ என்பது முஹம்மது நபியவர்கள் ஒரு

நபிதான் என்று உறுதிபடுத்துவதற்காக, அவர்களது தோள்களுக்கிடையே இருந்த

‘முத்திரை’யை குறித்து இறைவன் செய்த அறிவிப்பு என்பது இங்கு

பொருந்தவில்லை. நேசகுமாரின் கூற்றுப்படி ‘முத்திரை’ என்ற பதம் தனது

நபியை உறுதிப்படுத்துவதற்காக இறைவன் உபயோகித்த வார்த்தை. ஆனால்

நயவஞ்சகர்களைப்பற்றி குறிப்பிடும்போது அவர்களை இழிவுபடுத்தும் வகையில்

இதே ‘முத்திரை’ என்ற வார்த்தையை இறைவன் உபயோகிக்கிறான்.

3. இந்த வார்த்தைக்கு விளக்கமாக குர்ஆனில் வேறு வசனங்கள் இருக்கிறதா ?

அத்தியாயம் 5 வசனம் 3-ல் (இறுதியாக இறங்கிய வசனம்) இறைவன் இவ்வாறு

கூறுகிறான்: “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை

பரிபூர்ணமாக்கிவிட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையை

பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே

(இசைவானதாக) தேர்ந்தெடுத்துள்ளேன்”.

இஸ்லாம் மார்க்கம் பரிபூர்ணமாக்கப்பட்டபிறகு, இன்னொரு இறைவேதமோ,

அல்லது இருக்கும் இறைவேதத்தில் மாற்றங்களோ, அல்லது இன்னொரு இறைதூதரோ

வரவேண்டிய அவசியம் இல்லை.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு எந்த நபியும் அனுப்பப்படமாட்டார்கள்

என்பதால்தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இறைவேதம் எக்காலத்திற்கும் நின்று

வழிகாட்டும் வண்ணம் அன்று முதல் இன்று வரை எவ்விதத்திலும் மாற்றமின்றி

பாதுகாக்கப்பட்டுள்ளது.

தவிர, முஹம்மது (ஸல்) அவர்களைப்பற்றி குர்ஆனுக்கு முன் இறக்கப்பட்ட எல்லா

வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிறகு ஒரு நபி

வருவார் என்றிருந்தால், அதைப்பற்றி குர்ஆனில் நிச்சயம் ஏதாவது

முன்னறிவிப்பு இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

4. ஹதீஸில் இது தொடர்பான விளக்கம் இருக்கிறதா ?

நிறைய இருக்கிறது. நேசகுமார் குர்ஆனிலிருந்து மட்டும் ஆதாரங்கள்

கேட்டதால், ஹதீஸ்களை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம்

குர்ஆனின் வசனங்களுக்கு விளக்கம் பெற, ஹதீஸ்கள் தேவையில்லை என்று இருக்க

முடியாது. நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை குர்ஆனின் விளக்கமாகவே

அமைந்திருந்தது. ஹதீஸ்களை ஒதுக்கிவிட்டு குர்ஆனை மட்டும் படிப்பதால்

தேவையான விளக்கங்களை பெற முடியாமலே போய்விடும்.

குர்ஆனை விளங்கிக்கொள்ள மார்க்க அறிஞர்கள் உதவி ஏன் ?

ஒரு மொழியை நன்கு அறிந்திருந்தால் மட்டும் அம்மொழியில் எழுதப்பட்ட

புத்தகங்களை படித்து அதன் கருத்துக்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்

என்றிருந்தால், நாட்டில் பல்கலைகழகங்களோ கல்லூரிகளோ தேவைப்படாது.

எனக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை இருக்கிறதென்றால் மருத்துவம் சம்பந்தமான

ஆங்கில புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு நான் ஒரு மருத்துவர் ஆகிவிட

முடியும்! நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை! நாட்டில் பலபேர்

பிழைத்துப்போனார்கள்!

ஒரு பாடபுத்தகத்தை படிப்பதற்கே நமக்கு ஆசிரியர்களின் உதவி

தேவைப்படும்போது, இறைமறையாகிய திருக்குர்ஆன் ஒரு பாடபுத்தகமல்ல என்பதை

நாம் நினைவில் வைக்க வேண்டும். குர்ஆன் விரிவுரையாளர்கள் அரபி

மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்ததோடு, குர்ஆன் வசனங்களுக்கு நபிகளார்

தந்த விளக்கங்களையும் அறிந்திருந்தார்கள். அதோடு, ஹதீஸ்கள், வசனங்கள்

இறங்கிய காலம், பிண்ணனி, ஆகியவற்றையும் அறிந்திருந்தார்கள். இத்தகைய

மார்க்க அறிஞர்களின் குர்ஆன் விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வரையில்

பிரச்னை எதுவும் இல்லை. அப்படி இல்லாமல் அதற்கு மாற்றுக்கருத்து சொல்ல

யாராவது விரும்பினால், அவர்களுக்கு மேலே சொன்ன அத்தனை தகுதிகளும்

இருக்க வேண்டும். அத்தனை விஷயங்களையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் அவர்களின் விளக்கம் வெறும் வியாக்கியானமாகத்தான் இருக்கும்.

இந்த கடிதத்தை எழுத எனக்கு உதவிய மார்க்க அறிஞர் மவுலவி ஹாபிஸ்

ஹுசைன் கனி பாகவி காஸிமி அவர்களுக்கு எனது நன்றிகள்!

- சலாஹுத்தீன்

salahudn@yahoo.co.uk




Copyright:Thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.