Thursday August 31, 2006
கடிதம்
பாபுஜி
நேசகுமார் என்பவர் எண்ணச்சிதறலாக பலப்பல அபாண்டங்களை 25 08 2006 திண்ணையில் எழுதியிருக்கிறார். அவற்றுள் இரண்டனுக்கு மட்டும் எனக்கு கருத்துச் சொல்லத் தோன்றுகிறது:
1) கமலா சுரையா பற்றிய அவருடைய எண்ணச் சிதறல் அடிப்படையற்றது. 'தேஜஸ்' என்கிற மலையாள இதழில் (15 11 2005) கமலா சுரையா தனது நிலையை தெளிவாக உரைத்திருக்கிறார். எனவே நேச குமாரின் அடிப்படையற்ற கருத்து, அவர் மீதான பரிதாபத்துக்கே வழி கோலுகிறது.
2). டெஹல்காவும் காலச்சுவடும் இஸ்லாமியர்களின் பயங்கரவாதத்தின் வேர் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் நேச குமார் தனது பிடிவாதமான புரிதலில் அதை இஸ்லாமிய மூலத்துடன் சம்பந்தப்படுத்தி சுய திருப்தி கொள்கிறார். இயல்பான பார்வையுடைய எவருக்கும், எந்த ஒரு சமூகமும் அடக்கி ஒடுக்கப்படுவதே அதில் ஆராயாது உணர்ச்சி வயப்படுகிற ஒரு சிலர் எதிர்வினையாற்ற வழிவகுத்துவிடுகிறது என்று 'வேர்' பற்றி எளிதாக விளங்கமுடியும் போது இவர் 'வேறு'விதமாக எழுதி இருப்பைத் தக்க வைக்க வேண்டியதும் நமக்குப் புலனாகிறது. முன்னெல்லாம் இல்லாத அளவு, பயங்கரவாதம் பெருகுவதன் 'வேராக' இந்துத்துவ ஆதிக்கச் சக்திகளின் ஆட்டமே காரணம் என்று எவரும் புரிந்துக்கொள்வர். (இரண்டு வகை பயங்கரவாதங்களுமே கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டுமென்பதில் எதிர் கருத்தில்லை).
இந்தியாவில் இஸ்லாமியரின் தீவிரவாதத்தை விடவும் அதிகமாக சுமார் 150 மாவட்டங்களில் கோலோச்சுகிற நக்ஸல் தீவிரவாதம் குறித்து இவர் என்ன சொல்வார்?: அவர்களும் குரானிலிருந்து நகலெடுத்து 'வேர்' நட்டுக்கொண்டார்கள் என்றா?
இந்த இலட்சணத்தில் //இஸ்லாம் பற்றி எழுதாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இன்னமும் நான் பெறவில்லை// என்று காமெடியும் செய்கிறார்.
--------------------------------------------------------------------------
babuto@gmail.com
Copyright:thinnai.com