Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Thursday October 26, 2006

இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!

இப்னு பஷீர்


அக்டோபர் 19 தேதியிட்ட திண்ணையில் சூபிமுகமது என்பவர் 'வகாபிய பார்ப்பனீயத்தின் மூடநம்பிக்கை' என்ற தலைப்பில் 'பித்அத்' எனப்படும் இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

'நபிகள் நாயகம் சொல், செயல், அனுமதிக்குள் வராதது அனைத்தும் பிதுஅத் (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது.) இது வாழ்வின் அனைத்து செயல்பாடுகளிலும் நிறைந்துள்ளது' என்று சொல்லும் சூபி 'நபிகள் நாயகம் பேசாத தமிழ் மொழி, உபயோகித்திராத இன்டெர்நெட், தொலைக்காட்சி சேனல்கள், விசிடி ஆகிய அனைத்துமே பிதுஅத்' என்கிறார். இது தவறான புரிதல்.

இஸ்லாத்தின் கொள்கைகள், போதனைகளில், ஆன்மீகம், லௌகீகம் என இரு வகைகள் இருக்கின்றன. இறை சார்ந்த அடிப்படை நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள், பிரார்த்தனைகளை உள்ளடக்கிய ஆன்மீக போதனைகளில் எந்த விதமான கூடுதல் குறைவுகளையும் யாரும் செய்வதற்கு அனுமதியில்லை. அதனால்தான் மவுலுது எனப்படும் கவிதைகளை ஒரு பிரார்த்தனையாக கருதி, அதை படிப்பதால் தனக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து படிப்பது ஒரு பித்அத் என மார்க்க அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உறவுகளை வலுப்படுத்துதல், தொழில் புரிதல், உண்ணுதல், பருகுதல் போன்ற இதர லௌகீக காரியங்களில், இஸ்லாம் சில வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக பன்றி மாமிசம் உண்ணுவது, மது அருந்துவது ஆகியவை தடை செய்யப் பட்டிருக்கிறன. இதுபோன்ற வரையறைகளுக்கு உட்பட்ட, கட்டுப்பாடுகளை மீறாத, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப் பட்டிராத வேறு எந்தச் செயலையும் செய்வது பித்அத் ஆகாது. எனவே சூபி பட்டியலிட்டிருக்கும் இன்டெர்நெட், தொலைக்காட்சி போன்றவை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப் படாதவரை தடுக்கப் பட்டவை அல்ல.

''மார்க்க விஷயத்தில் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள், உலக விஷயங்களில் என்னை விட நீங்களே நன்கு அறிந்தவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே நவீனங்களுக்கு இஸ்லாம் என்றுமே எதியரில்ல!

இஸ்லாம் எதையெல்லாம் தடை செய்துள்ளதோ அதைத் தவிர்த்துக் கொண்டு, அனுமதித்த விஷயங்களில் இன்றைய நவீனங்களையும், நாளை வரவிருக்கும் புதிய நவீனங்களையும் உபயோகித்துக் கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை!

ஒரு முஸ்லிம் இவ்வாறு வரம்பு மீறாமல் செயல்படும்போது, லௌகீக காரியங்கள் கூட ஆன்மீகமாக கருதப்படும் என்பது இஸ்லாமின் தனிச்சிறப்பு. ஒருவர் தன் மனைவிக்கு அன்புடன் ஒரு கவளம் உணவு ஊட்டுவது கூட அவருக்கு நன்மையை பெற்றுத்தரும் காரியமாகும்.

இந்த அடிப்படைகளை புரிந்து கொள்ளாததற்காக நாம் சூபிமுகமதுவை நொந்து பயனில்லை. பல முஸ்லிம்களே கூட இதை புரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.

இப்னு பஷீர்

http://ibnubasheer.blogsome.com/

ibnubasheer@gmail.com




Copyright:thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.